நண்பர்களுடன் சென்ற இளைஞர் களனி கங்கையில் சடலமாக மீட்பு

198 0

கொழும்பு – ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடை சுப்பரமணியம் பிரேம் ஆனந்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருக்கும் பொலிஸார் , அவரது உடற்பாகங்களின் பகுதிகள் மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு தினைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மீண்டும் சடலம் தோண்டப்படலாம் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கடந்த 11 ஆம் திகதி நண்பர்களுடன் சென்ற பிரேம் ஆனந்த் அன்றையதினம் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. இவர் இதற்கு முன்னும் இவ்வாறு நேரதாமதத்துடன் வருவதனால் வீட்டார் இதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளனர்.

எனினும் இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை களனி கங்கையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பின்னர் சடலம் ராகமை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மரண பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் சடலத்தில் சில காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார் இந்த காயங்களினால் மரணம் ஏற்பட வில்லை என்றும், இந்த மரணத்திற்கு காரணம் இன்னும் கணடறியப்பட வில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை இரவு சடலம் குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டது. குடும்பத்தினர் நேற்று  வியாழக்கிழமை இறுதி கிரியை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதேவேளை கடந்த 11 ஆம் திகதி தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக நவகம்புற பகுதிக்கு சென்றதாகவும். அன்றைய தினத்திலிருந்தே காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்த குடும்பத்தினர். பின்னர் இவர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிசார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.