ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பட்டதாரி ஒருவர் உடுவேரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக நிக்கவரெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் இராணுவத்தில் பணியாற்றிவிட்டு விலகிய அதிகாரி ஒருவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனது உள்ளாடைக்குள் ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கொண்டு உள் வீதியொன்றில் நின்றிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்றும், தான் காதலித்த தனது காதலி தன்னைக் கைவிட்டுவிட்டு சென்றதால் அந்த துயரில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானதாகவும், பின்னர் போதைப் பொருள் பாவனைக்கு பணம் இல்லாத காரணத்தினால் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாகவும் அவரிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிக்கவ ரெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.