பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி நிர்வாகத்தாருடன் இராதாகிருஷ்ணன் சந்திப்பு!

575 0

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டதுறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பான கூட்டம் ஒன்று இன்று கொழும்பு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கல்வியற் கல்லூரிகளின் ஆணையாளர் கே.எம்.எச். பண்டார, ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ரமணி அபேநாயக்க, விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பாகவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட சுமூகமற்ற சூழ்நிலை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் இராதாகிருஷ்ணன்,

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக ஆராய்ந்த பொழுது அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை சுமூகமான நிலைக்கு தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக சுமூகமான தீர்வு எட்டப்பட்டதுடன் ஒழுக்காற்று குழுவினரின் அறிக்கை கிடைக்கப்பெற்றதுடன் குறித்த விடயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தொடர்பாக இடமாற்றம் செய்வதா அல்லது வேறு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் தீர்மானிப்பது எனவும் அதுவரையில் அவர்கள் தற்காலிக இடமாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது விரிவுரையாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆணையாளர் அது தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாகவும், அது தொடர்பாக விரிவுரையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் அங்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடுவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவில் விரிவுரையாளர்கள், உப பீடாதிபதிகள், மாணவர்கள் அணைவரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு கடந்த காலங்களில் பெருந்தோட்டதுறையை சார்ந்த மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டனர். பெருந்தோட்டதுறையில் கணித, விஞ்ஞான பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவான எண்ணிக்கையினர் இருந்த காரணத்தினால் அந்த துறைக்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது.

எனவே எதிர்வரும் காலங்களில் இந்திய வம்சாவளி தமிழர்களை உள்வாங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தில் ஒன்றை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

அதே நேரம் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு மாதம் ஒரு முறை கல்வி அமைச்சில் இருந்து பணிப்பாளர் ஒருவரை அனுப்பி நிலைமைகளை ஆராய்ந்து கல்லூரியில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்தி கல்லூரியை சிறப்பாக கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.