விமலிற்கு எதிரான வழக்கை மே மாதம் விசாரணைக்கு எடுக்க உத்தரவு

447 0

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை மே மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று (25) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான தினத்தை அறிவிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் வேண்டியிருந்தனர். 

குறித்த வழக்கின் சாட்சியாக வீடியோ ஒன்றிணையும் பொலிஸார் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளனர். 

அதனடிப்படையில் குறித்த வழக்கை மே மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார். 

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ரால் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை தொடர்பில் விமல் வீரவங்ச, ஜெயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ரொஜிர் செனவிரத்ன, பியசிறி விஜேரத்ன, முஹமட் முஸாமில் ஆகியவர்களுக்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிஸார் குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.