போலி தங்க உருளைகளை விற்பனை செய்தவர் மீது பொலிஸ் வலை வீச்சு

262 0

புதையலொன்றிலிருந்து எடுத்த தங்க உருளைகள் என்று கூறி போலி தங்க உருளைகளை விற்பனை செய்து இருபத்தைந்து இலட்ச ரூபாவினைப் பெற்று மோசடி செய்த இருவரைத் தேடி மொனராகலைப் பொலிசார் வலை விரித்துள்ளனர்.

மொனராகலையில் ஆலயமொன்றை ஏற்படுத்தி அங்கு மந்திரவாதியாக இருந்து வந்த பெண் ஒருவரே தங்க உருளைகள் என்று நினைத்து போலி தங்க உருளைகளைப் பெற்று இருபத்தைந்து இலட்ச ரூபாவை வழங்கி ஏமாற்றமடைந்தவராவார்.

தங்க உருளைகள் என்று நினைத்து அவற்றைப் பெற்றவர் அவற்றை பரிசோதனை செய்து பார்க்கையில் அவைகள் தங்க உருளைகள் அல்ல. அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட இரும்பு உருளைகள் என்று தெரியவந்ததும் அம் மந்திரவாதிப் பெண் மொனராகலைப் பொலிஸ் நிலையம் சென்று தாம் ஏமாற்றப்பட்டதாகக் கூறி நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது மேற்குறிப்பிட்ட இருவர் ஏற்கனவே நோயினால் பீடிக்கப்பட்ட ஒருவரை மந்திரவாதியிடம் கூட்டி வந்து நோய் தீர்ப்பதற்கென மந்திர நூல் கட்டுமாறு மந்திரவாதியிடம் கேட்டுக்கொண்டனர். 

மந்திரவாதியும் தமது மந்திரபலத்தை காட்டி நூல் கட்டியுள்ளார். அதையடுத்து அவர்கள் மந்திரவாதியின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தையும் பெற்று சென்று விட்டனர்.

மூன்று தினங்களில் அவர்கள் மந்திரவாதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுநோயாளிக்கு பூரண சுகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு நன்றி கூறிவிட்டு தொடர்ந்தும் நட்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

அதன்பின்னரே தங்க உருளைகள் தம்மிடம் இருப்பதாகவும் அதை பெற்றுக் கொள்ளும்படியும் அவர்கள் மந்திரவாதியிடம் கூறியுள்ளனர். 

அத்துடன் உண்மையான தங்க உருளையையும் காட்டியுள்ளனர். அத் தங்க உருளையைப் பெற்ற பெண் மந்திரவாதி அதனை நகைக்கடையொன்றிற்கு சென்று பரிசீலனை செய்த போது அது உண்மையான தங்க உருளையென தெரியவந்துள்ளது. 

அது போன்று பல உருளைகள் தம்மிடம் இருப்பதாகவும் அவைகளுக்கு குறைந்தபட்சம் இருபத்தைந்து இலட்சம் ரூபா தேவையென்று கூறியதால் மந்திரவாதியும் தங்க உருளைகளை தம்மிடம் தருமாறு கூறி இருபத்தைந்து இலட்ச ரூபா பணத்தையும் கொடுத்துள்ளார்.

தங்க உருளைகளைப் பெற்ற மந்திரவாதிவ் அதன் மூலம் தங்க ஆபரணங்களை செய்ய சென்றதும் அவைகள் போலியானவைகள் என்று தெரியவந்ததும் தம்மிடம் மோசடி செய்தவர்கள் குறித்து மந்திரவாதி மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிசார் இது குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.