விபத்து இடம்பெற்ற காரில் இருந்து துப்பாக்கி மீட்பு

290 0

இன்று அதிகாலை விபத்து இடம்பெற்ற காரில் இருந்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

8 மில்லி மீற்றர் நீளமான தோட்டாக்கள் பாவிக்க கூடிய துப்பாக்கி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 

இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட இத்துப்பாக்கியின் தோட்டாக்கள் 8 உம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்துக்குள்ளான காரின் கதவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கியின் உரிமையாளர் தொடர்பிலும் எதற்காக துப்பாக்கி எடுத்துச் செல்லப்பட்டது என்பது தொடர்பில் இதுவரையில் எதுவும் இனங்காணப்படவில்லை. 

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் நைனாமடம பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

இன்று (20) அதிகாலை 3.15 மணியளவில் சிலாபம் திசையில் பயணித்த கார் ஒன்று அதே திசையில் பயணித்த மீன் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்னால் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காரில் பயணித்த 9 ஆண்கள் படுகாயங்களுடன் நீர்கொழும்பு மற்றும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த நால்வரது சடலங்கள் மாரவில வைத்தியசாலையிலும் இருவரது சடலங்கள் நீர் கொழும்பு வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment