கடும் வறட்சி 35,000 குடும்பங்கள் பாதிப்பு

304 0

00-2இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியினால் கிழக்கு, வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் 35,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குடும்பங்கள் தங்களது தேவைக்கான குடிநீர் உட்பட நாளாந்தத் தேவைக்கான நீரைப் பெறுவதற்குக்கூட பெரும் இன்னல்களையும், அசௌகரியங்களையும் சந்தித்துவருகின்றனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட நீர்நிலைகளனைத்தும் நீரின்றிக் காணப்படுவதோடு, ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த வறட்சி தொடர்வதால், சிறுதானியப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்துள்ளது.

குளங்களும், நீர் நிலைகளும் நீர் இன்றி காணப்படுவதால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மீன்களும் செத்து மடிகின்றன. காட்டு யானைகள் நீர் தேடி மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றன.

இடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி வறட்சியினால் வட மத்திய மாகாணத்திலுள்ள பொலநறுவ மாவட்டத்தில் மட்டும் 19 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 71 ஆயிரம் பேர் குடி நீர் பிரச்சனையை எதிர்கொள்வதாகக் கூறப்படுகின்றது

வறட்சியின் காரணமாக குறிப்பாக குடி நீர் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் உள்ளுராட்சி சபைகள் ஊடாகவும், தேசிய நீர் வழங்கல் வாரியத்தின் ஊடாகவும் நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. ஆனால், அது போதுமானதாக இல்லை என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.