ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போஷகரும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) முற்பகல் 11.00 மணிக்கு பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
விஜேராமவில் உள்ள தனது வாசஸ்தலத்தில் வைத்து இந்த உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூட்டரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேரும் இவ்வாறு பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே 16 பேரும் கடந்த அரசாங்கத்திலிருந்து விலகினர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கடந்த அரசாங்கத்தில் பல்வேறு அதிரடி தீர்மானங்களை முன்னெடுத்தனர்.
இருப்பினும், தற்பொழுது சுதந்திரப் பறவை போன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ளமையானது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அடித்த சாவு மணியாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.