மஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது- குமார வெல்கம

241 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் பயணத்தில் குட்டுக்கள் வாங்குவதில் சிக்கல் இல்லையெனவும், அவர் குட்டுவதற்கு தகுதியானவர் எனவும் கூட்டு எதிரணியிலுள்ள சிரேஷ்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட கூட்டத்தில், குமார வெல்கமவுக்கு பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் சிலரினால் விமர்ஷனங்கள் முன்வைக்கப்பட்டமை குறித்து வினவிய போதே குமார வெல்கம எம்.பி. இதனைக் கூறினார்.

என்னுடைய கருத்தை நான் கூறிக் கொண்டே தான் இருப்பேன். எனது தலைவர் குட்டினால் அதனைத் தடவிக் கொள்வேன். அதற்காக கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர கூட்டு எதிரணியில் வேறு தலைவர் ஒருவர் இல்லையென்பதே என்னுடைய கருத்தாகும்.

தனக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ போன்று பிரபலம் கிடையாது. அவ்வாறு நான் பிரபலம் அடையும் போது எனது வயது அதற்கு இடம்கொடுக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியாக வருபவருக்கு சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இருப்பது கட்டாயமானது. அது மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமே இருக்கின்றது எனவும் குமார வெல்கம தனியார் வானொலியில்  நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறினார்.

Leave a comment