அத்தனகல்லை கித்தம்மஹர போனெகலை வழியாக அத்தனகலு ஓய மீது நிர்மாணிக்கப்பட்ட பாலமொன்றை திறந்து வைப்பதற்காக சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு எதிராக நேற்று பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
முந்தைய அரசாங்கத்தின் கீழேயே இந்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் திறந்து வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பொதுமக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் பாலமானது, அண்மையில் மேல்மாகாண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக் ஷ மற்றும் அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் பிரியந்த புஷ்பகுமார ஆகியோரின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டிருந்தாலும், நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவிருந்தது.
இதைத் தெரிந்துகொண்ட மக்கள் குறித்த பகுதியில் ஒன்றுகூடி அங்கு வந்திருந்த அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, பைஸர் முஸ்தபா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோருக்கெதிராக கூச்சலிட்டும் இடைமறித்தும் தமது எதிர்ப்புகளைக் காட்டினர்.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த பாலம் திறந்து வைக்கும் வைபவம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையில் இடம்பெற்று முடிந்தது.
வைபவம் முடிந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அங்கிருந்து வெளியேறியவுடன் அங்கு கூடியிருந்த மக்களும் அகன்று சென்றனர்.