ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட எட்டு பேர் கைது

188 0

சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட எட்டு பேர் பிலியந்தலை பொலிஸாரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட எட்டு பேரையும் 24 மணிநேர பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு கெஸ்பாவ நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்வத்த பண்டாரநாயக்க தோட்ட குடியிருப்பு பகுதியில் பிலியந்தல பொலிஸ் நிலைய குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 4 மணி முதல் 6.30 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

பொலிஸாரின் வருகையை அறிந்த குறித்த வீட்டிலிருந்த பெண் தன்னிடமிருந்த ஹெரோயினை விழுங்கியுள்ளார். இதனால் மயங்கிய பெண்ணை பொலிஸார் களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்து பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதனையடுத்து வீட்டை முழுமையாக சோதனையிட்ட பொலிஸாரால் தகுந்த ஆவணங்களற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட எழுவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும், கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஏழுபேரும் கெஸ்பாவ நீதவான் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளை நீதவான் அவர்களை 24 மணிநேர பொலிஸ் தடுப்பு காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment