நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கின் சாட்சிகளை விசாரணைக்கு உட்படுத்த உயர்நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கூறி குற்றப் பத்திரிகையின் வரைபை சட்டமா அதிபர் கடந்த ஜூலை 30 ஆம் திகதி உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த நிலையில், அது, நேற்று எந்த திருத்தங்களும் இன்றி குற்றப் பத்திரிகையாக பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த குற்றப் பத்திரிகையில், ரஞ்சனுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் சுற்றவாளி என ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தில் அறிவித்ததை தொடர்ந்தே வழக்கின் சாட்சிகளை விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், உயர்நீதிமன்ற நீதியரசர்களான நளின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந் நிலையில் வழக்கின் சாட்சியாளர்கள் பட்டியலை நீதிமன்றத்தில் எதிர்வரும் செப்டெடம்பர் 5 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அன்றைய திகதிக்கு இந்த வழக்கையும் ஒத்தி வைத்தது.
நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக, மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோர் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கடந்த 2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரஞ்சன், நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல் வாதிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு நீதித்துறை தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணை நடத்தி பிரதி அமைச்சருக்கு எதிராக உரிய தண்டனையை வழங்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பான காணொளியை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேலோட்டமாக பார்க்கும் போதே, அவர் நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் விதமாக பேசுவது தெளிவாக தெரிவதால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
அதனடிப்படையில் சட்டமா அதிபரினால் முதலில் குற்றப்பத்திரிகை வரைவு முன் வைக்கப்பட்டதுடன் நேற்று அது குற்றப் பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது. அதன்படியே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.