யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் ட்ரயல் அட்பார் நீதிமன்றினால் 7 எதிரிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் மீதான விசாரணையானது இன்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மேன்முறையீட்டின் மீதான விசாரணையானது 5 நீதியரசர்களை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழுவினர் முன்னிலையிலேயே இடம்பெறவுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு குறித்த மாணவி பாடசாலை செல்லும் போது கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொலைச் சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரம் மீதான வழக்கு விசாரணையானது தமிழ்மொழி பேசும் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினால் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட 9 சந்தேகநபர்களில் இருவர் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஏனைய 7 பேருக்கும் கடந்த வருடம் ட்ரயல் அட்பார் நீதிமன்றால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தீர்ப்பளிக்கப்பட்ட அந்த 7 குற்றவாளிகளும் தமக்கெதிரான தண்டனையை எதிர்த்து தமது தரப்பு சட்டத்தரணிகளினூடாக மேன்முறையீடு செய்திருந்தனர்.
இதன்படி இந்த வழக்கின் விசாரணையானது இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் அதற்காக தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 7 பேரையும் உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.