ஜனாதிபதி தனது சம்பளம் தொடர்பில் வெளியிட்ட தகவல் பொய்யானது என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (04) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தனது ஒரு மாத சம்பளம் 95 ஆயிரம் ரூபா மட்டுமே எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் மேல் மாகாண முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி நாட்டு மக்களிடம் பொய்யான தகவலைத் தெரிவித்து மக்களைப் பிழையாக வழிநடாத்த முயற்சிக்கின்றார். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும்.
ஜனாதிபதி குறிப்பிட்ட சம்பளத்திலா, தொலைபேசிக் கட்டணத்தை செலுத்துகிறார். ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்வுகளை நடாத்துகின்றார். இதனை மறைத்து ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்க முன்வருவாறாக இருந்தால், அவர் சொல்வது பொய் என்பதை முழு நாட்டு மக்களும் அறிவார்கள்.
ஜனாதிபதி இதனைவிடவும் பொறுப்பாக இது போன்ற தகவல்களை வெளியிட்டிருக்க வேண்டும். இது மக்களை தவறாக வழிநடாத்தும் கருத்துக்கள் ஆகும். ஜனாதிபதி உண்மையைக் சொல்லுவாறாக இருந்தால் நல்லது எனவும் பிரசன்ன ரணதுங்க எம்.பி. மேலும் கூறியுள்ளார்.