கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு இம்மாதம் 24ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றம் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி 01ம் திகதி முதல் 2015ம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 24 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், 61 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
வழக்குடன் தொடர்புடைய 92 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது வழக்காக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

