மக்களின் குடியிருப்பு பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியிலீடுபடுவதை தடுக்குமாறு மைத்திரிக்கு கடிதம்!

326 0

sivasakthy-ananthan-720x480மக்களின் குடியிருப்புப் பிரதேசங்களில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,‘நாட்டின் பாதுகாப்புக்காக இருக்கும் இராணுவம் தமது பயிற்சிகளை பொதுமக்கள் குடியிருப்புகள் இல்லாத இடங்களிலயே மேற்கொள்வது எந்தவொரு நாட்டினதும் வழக்கமாகும்.

அவ்வாறிருக்கையில் வவுனியா மாவட்டத்திலுள்ள செட்டிகுளம் பிரதேசச் செயலாளர் பிரிவின் கீழ் மக்கள் செறிந்து வாழும் மாணிக்கம் பண்ணையிலும் (மெனிக் பாம்) வவுனியா பிரதேசத்தில் சாந்தசோலை கிராமத்திலும், இராணுவம் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளமையை அங்கு வசிக்கும் மக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

அண்மையில் மன்னாரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் பயிற்சி காரணமாக கர்ப்பணித் தாய்மார்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளமையையும் இருதய நோயாளர்கள் மற்றும் சிறு குழந்தைகள் அச்சத்தின் காரணமாக, உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருப்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது.

இவ்வாறான பின்னணியில் மீண்டும் மீண்டும் தமிழர்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு மத்தியிலும் அப்பகுதிகளுக்கு அண்மித்த பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற இராணுவ ஆயுதப் பயிற்சிகளால் எமது மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

நமது நாட்டின் ஒரு பகுதி மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துக்கொண்டு, நல்லாட்சி நடத்துவது என்பது இயலாத காரியமாகும். கடந்த அரசாங்கங்கள் விட்ட அதே தவறுகளை, இந்த அரசாங்கமும் மேற்கொள்கிறதா என்ற பாரிய குற்றச்சாட்டுக்களும் இங்கு எழுகின்றன.

ஆகவே, இந்த விடயத்தில் உடன் கவனம் செலுத்தி எமது மக்களின் அச்சமற்ற சுகந்திரமானதும், பாதுகாப்பானதும் உறுதி செய்ய வேண்டும்மென்று தங்களை கேட்டுக்கொள்கிறேன்’, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.