சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்

301 0

ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பபில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்கிசை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணை நீதவான் லோசன அபேவிக்கிரம முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சட்டவாளர்கள், யுத்த காலத்தின் போது, இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீதே பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டதாகவும் எனவே அவரையும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது, சரத் பொன்சேகாவிடம் ஏற்கனவே வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

எனினும் சரத் பொன்சேகா முறைப்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் சட்டவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

தேவைப்பட்டால் எதிர்வரும் விசாரணையின் போது அதனை சுருக்கமாக வெளிப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளஇராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment