காரைநகரில் கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடு; மாணவர்கள் அச்சத்தில்

210 0
யாழ்ப்பாணம் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் கடற்படையினர் முகாம் அமைக்கும் பணியை தொந்தும் முன்னெடுத்து வருவதாக பாடசாலை நிர்வாகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் பாடசாலை நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் கடற்படையினர் முகாம் அமைக்கும் நோக்குடன் பாடசாலைக் காணியைப் புல்டோசர் மூலம் அண்மையில் துப்புரவு செய்தனர்.

இதன்போது, பாடசாலை நிர்வாகம், காரைநகர் பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் ஆகியோரை அழைத்துக்கொண்டு, இது பாடசாலைக்குரிய காணி என்றும் இதில் முகாம் அமைப்பதை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு தாம் ஒரு சாதகமான பதிலை விரைவில் தருவோம் என்று கடற்படையினர் கூறிவிட்டு சென்றனர்.

எனினும் இரவோடு இரவாக பாடசாலைக் காணியின் குறிப்பிட்டளவு நிலப்பரப்பினைக் கையகப்படுத்தி முட்கம்பி வேலி அமைத்து முகாம் அமைக்கும் பணியினைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலை வளாகத்தில் கடற்படையினர் முகாம் அமைப்பதால் பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கும் பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதுவரை காலமும் கல்லூரிக்கு சற்றுத் தொலைவில் இருந்த கடற்படையினர் தற்போது பாடசாலைக் காணியில் முகாம் அமைத்து வருகின்றனர்.

எனவே கடற்படையினரின் அத்துமீறய செயற்பாடு தொடர்பில் தமிழ் தலைமைகள் கவனத்தில் எடுத்து உரிய தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் பாடசாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment