ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மோசடி – இரண்டு வாரத்தில் விசாரணை ஆரம்பம்

215 0

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுடன் தொடர்புடைய தகவல்கள் மற்றும் சாட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டுவார காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சர்வதேச ரீதியாக இருந்து வரும் அங்கீகாரத்தை பாதுகாத்து சிறந்த விமான சேவையாக அதன் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல வேண்டியதன் தேவையை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவையுடன் இணைந்த 06 தொழிற்சங்கங்களில் 05 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து நிறுவனத்தின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது குறித்து விரிவான கருத்துக்களும் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் சேவைகளின் தரத்தை மேம்படுத்தி பிரயாணிகளுக்கு சிறந்த முறையில் பயணம் செய்யக்கூடிய வகையில் வசதிகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி; தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் தகவல்களை பெற்றுக்கொண்டு அனைவரினதும் முன்மொழிவுகளை கவனத்தில் எடுத்து அரசாங்கத்திற்கு தேவையான பரிந்துரைகளை செய்வதற்கு அந்த ஆணைக்குழு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, லக்ஷ்மன் கிரியெல்ல, மங்கள சமரவீர, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரக்கோன், ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment