ரவூப் ஹக்கீமுடன் நேரடி விவாதத்திற்கு நான் தயார் – அமீர் அலி

223 0

ரவூப் ஹக்கீம் எமது சமூகத்தை அடகு வைத்து, எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமோ சம்பாதித்தார், என்ன மாற்றங்களுக்கு விலைபோக முடியுமோ இவற்றையெல்லாம் தைரியமாக ஏன் செய்தார் என்றால் கட்சியில் யாரும் கேட்டால் அவர்களை துரோகிகளாக வெளியேற்றி விடுவார் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிறைந்துறைச்சேனையில் நேற்றிரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

பதினேழு வருடங்களாக எமது கல்வியை நேர்த்தியான கல்வியாக கொண்டு செல்வதற்கும், எமது காணிகளை மீட்டெடுக்கவும் அதிக தூரம் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன்.

கோறளைப்பற்று மத்தி விடயம் சம்பந்தமாக பேசுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். முடியும் என்றால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அல்லது அவரது ஆட்களை என்னோடு மூன்று மணிநேர நேரடி விவாதத்திற்கு வர முடியுமா என்று கேட்கின்றேன்.

கல்குடாப் பிரதேசத்தில் உள்ள மக்களிடத்தில் உள்ள மிக முக்கிய தேவையான கோறளைப்பற்று மத்திக்கு தனிப் பிரதேச சபை பெற்றுக் கொள்வதும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு எல்லைகளை மீட்டிக் கொள்கின்ற விடயமும், கல்வி ரீதியாக எமது சமூகம் முன்னேற வேண்டும் என்கின்ற விடயத்தில் தான் நாம் பயணிக்க வேண்டும்.

உங்களது பிள்ளைகள் சிறந்த கல்வியாளர்களாக மிளர வேண்டும், நாங்கள் இழந்து நிற்கின்ற எல்லைக் காணிகளையும் எங்களிடத்தில் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களையும் நாங்கள் மீட்டிக் கொள்வதற்கு எனது உயிர் இருக்கும் வரை போராட்டம் தொடரும்.

மறைந்த தலைவர் அஷ்ரப்பின் மறைவுக்கு பின் பல தடவைகள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உங்களுடைய அடிப்படைப் பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை.

80% பணத்தை வாழைச்சேனை பிரதேச சபைக்கு வரியாக மக்களாகிய நீங்கள் செலுத்துகின்றீர்கள். ஆனால் உங்கள் பகுதிக்கு 20% கூட செலவு செய்யப்படுவதில்லை.

இந்த மண்ணை நேசிக்கும் எங்களுக்கு இருக்கின்ற வலி ரவூப் ஹக்கீமை போன்றவர்களுக்கு தெரியாது. இதனை கல்குடா பிரதேச முஸ்லிம் மக்கள் யோசிக்க தவறுவார்களாக இருந்தால் ஏமாற்றி விட்டுத்தான் போவார்கள்.

பதினேழு வருடமாக ரவூப் ஹக்கீம் செய்த பிழை, அநியாயம், காட்டிக் கொடுப்புக்கள் போன்றவற்றை யாரும் துணிந்து கேட்காத காரணத்தால் எடுத்த எடுப்பிலே எதைச் செய்ய முடியும், எமது சமூகத்தை அடகு வைத்து எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும், என்ன மாற்றங்களுக்கு விலைபோக முடியும் என்று தைரியமாக ஏன் செய்தார் என்றால் கட்சியில் யாரும் கேட்டால் துரோகிகளாக வெளியேற்றிய வரலாறுகள் அதிகம் உண்டு.

எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களின் குரலாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒலிக்கும்.

எதிர்காலத்தில் கல்குடாப் பிரதேசத்தில் எல்லா விடயங்களிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும். இந்த நாட்டின் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டால் முதலில் நிற்பது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைமை என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார்.

Leave a comment