லிந்துலை பகுதியில் மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

218 0

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் எகமுத்துகம பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வெங்கடாசலம் சகுந்தலா வயது 52 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது வீட்டின் நீர் இறைக்கும் மோட்டாருக்கு அருகாமையில் மின் கம்பியை பிடித்தவாறு விழுந்து கிடந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் 2 மணித்தியாலத்துக்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாகவும் அவரின் பிள்ளைகள் தெரிவித்தனர்.

குறித்த பெண் நித்திரை கொள்வதற்காக வேறொரு வீட்டிற்கு செல்வது வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதன்படி நேற்று இரவு குறித்த பெண்மனி நித்திரை கொள்ள வராததையடுத்து அவரை தேடிய போதே இன்று அதிகாலை உயிரிழந்திருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இறந்தவரின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment