போக்குவரத்து குற்றத்துக்கு தண்டப் பணம் செலுத்தும் சட்டத்தில் மாற்றம்

238 0

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 28 நாட்களாக அதிகரிக்ப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் சுமித் நிஷ்ஷங்க அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த தண்டப் பணத்தைச் செலுத்துவதற்கான கால எல்லை 14 நாட்களாக இருந்துவந்தது.  ஒருவர் தொடர்ந்தும் 14 நாட்களுக்கு தண்டப்பணத்தைச் செலுத்தாமல் இருந்து 15 ஆவது நாளை அடைந்து கொள்வாராயின் அவரது தண்டப்பணம் இரட்டிப்பாக்கப்படும் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.

உதாரணமாக, வரியுடன் கூடிய தண்டப்பணமாக 500.00 ரூபா நியமிக்கப்படும் ஒருவர் அதனை 14 நாட்களுக்கு செலுத்தவில்லையாயின் 15 ஆவது நாள் முதல் அத்தொகை 1000 ரூபாவாக மாறுவதுடன், 10 வீத வரியும் சேர்ந்து 1100.00 ரூபாவை மொத்த தண்டப்பணமாக செலுத்த வேண்டிவரும்.

தண்டப்பணத்தை ஒருவர் 28 நாட்களுக்குள்ளும் செலுத்தாது போனால், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, போதையில் வாகனம் செலுத்துதல், வாகனத்துக்கான “லைசன்” மற்றும் காப்புறுதி பத்திரம் என்பன காணப்படாமை உட்பட 6 குற்றச் செயல்கள் தொடர்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் இதுவரையில் நடைமுறையில் இல்லையெனவும், இதனை நடைமுறைப்படுத்த இன்னும் சிறிது காலம் தேவைப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment