உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட மாட்டாது

296 0

உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி, வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டாரென, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் சில பகுதிகளை சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு இந்தியப் பிரதமர், இலங்கை வருகிறார் என சில இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அனைத்து பிரசாரங்களும் அரசாங்கத்துக்கு எதிரான சிலரினால் முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களாகும் எனக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று (29) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அனைத்து நாடுகளும் இன்று இலங்கையுடன் நட்புறவுடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன்மூலம் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாகக் கட்டியெழுப்ப முடியும் என்றும் இந்த நிகழ்ச்சித்திட்டங்களில் அனைத்து இனங்கள் மத்தியிலும் இருக்க வேண்டிய சமாதானம், ஐக்கியம் மற்றும் நம்பிக்கையை தகர்ப்பதற்கு அடிப்படைவாத சக்திகள் முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார். இது குறித்து மக்கள் உண்மையான தெளிவுடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.