டெங்கு பாதிப்புகள் குறித்து சேலம் ஓமலூரில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு

500 0

சேலம் ஓமலூரில் டெங்கு பாதிப்புகள் குறித்து மத்திய குழு இன்று ஆய்வை தொடங்கியது. அங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் பரவுவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு கடந்த 3 மாதங்களாக மிக அதிக அளவில் உள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை 55-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் உயிர் பலி தொடர்வதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். ரிக்வண்டி தொழிலாளி. இவரது 7 மாத பெண் குழந்தை சஞ்சனாஸ்ரீ கடந்த 2 நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தது.

தம்மம்பட்டி அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் மகா (வயது 19). கல்லூரி மாணவியான இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள தும்பல் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் சத்யா (9) டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். நேற்று ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பால் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். இதே போல ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் தலா 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் காய்ச்சல் அதிகம் பாதித்த பகுதிகளையும், சேலம் அரசு ஆஸ்பத்திரியையும் ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று இரவு சேலம் வந்தது.அந்த குழுவில் டெல்லி கே.எஸ்.சி.எச். மற்றும் எல்.எச். எம்.ஜி.குழும மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் டாக்டர் சுவாதி டுப்ளிஸ், பூச்சியல் வல்லுனர் வினய் கார்க், தேசிய தொற்று நோய் தடுப்பு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் கவுசல் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதே போல மாநில அதிகாரிகளான எய்ட்ஸ் கட்டுப்பாட்டு செயலர் செந்தில்ராஜ், பொது சுகாதார கூடுதல் இயக்குனர் டாக்டர் வடிவேல், டாக்டர்கள் இன்பசேகரன், உமா ஆகியோரும் அதில் உள்ளனர்.

இந்த குழுவினர் ஓமலூர் பகுதியில் இன்று ஆய்வை தொடங்கினார்கள். அங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் பரவுவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தார்கள். பின்னர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடுகிறார்கள்.

அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், இனி அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் சில அறிவுரைகளை டாக்டர்களுக்கு வழங்குகிறார்கள். தொடர்ந்து சேலம் அஸ்தம்பட்டியில் அந்த குழுவினர் ஆய்வு செய்கிறார்கள்.

பின்னர் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் மருத்துவ குழுவினர் அங்கு டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வார்டு மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டையும் பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார்கள். அப்போது காய்ச்சல் சாவை தடுக்க இனி வரும் நாட்களில் எடுக்க வேண்டிய நடிவடிக்கைகள் குறித்தும் டாக்டர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார்கள்.

Leave a comment