இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைகள் பற்றி ஆராய குழு

286 0

தேசிய தமிழ் தின விழா இம்முறை யாழ். இந்துக் கல்லூரியில் எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் நடைபெறும் என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

வட மாகாணத்தில் 16 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் மற்றும் இராணுவ சுற்றாடலுக்குள் இயங்கி வருகின்றன. எனவே, அவை தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்றை நியமித்திருக்கின்றேன். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் பல இடங்களில் இராணுவம் தங்கள் முகாம்களை அகற்ற இணக்கம் காட்டியுள்ளது.

மேலும், யாழ். மாவட்டத்திலேயே அதிக பாடசாலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது. குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் 11 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் அல்லது இராணுவ சூழலுக்குள் இருக்கின்றன. எனவே, அவை தொடர்பாக பேசியதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளை விடுவிக்க படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும், பலாலியில் உள்ள ஆசிரியர் பயிற்சி பாடசாலையை மட்டும் விடுவிக்க படையினர் மறுக்கின்றனர். எனவே, அது தொடர்பாக கொழும்பு சென்று பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றார்.

Leave a comment