வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் மாற்றுத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் மூன்று மாதங்களில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் பலற்றை விடுவிக்கவும் பாதுகாப்பு தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார்.
வவுனியா மன்னார் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் வசம் உள்ள பாடசாலைகள், ஆலயங்கள்¸ தேவாலயங்கள்¸ பள்ளிவாசல்¸ விகாரைகள் சுகாதார நிறுவனங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர், எதிர்வரும் டிசம்பர் மாதம் அளவில் அநேகமான காணிகளை விடுவித்து கொள்ள முடியும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

