தோட்டங்களில் இயங்குகின்ற முன்பள்ளிகளை மாகாணசபை மேற்பார்வை செய்ய வேண்டும்

376 0

மத்திய மாகாணத்தில் குறிப்பாக பெருந்தோட்டங்களில் இயங்குகின்ற முன்பள்ளி நிலையங்களை சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முறைகேடான முறையில் நடத்தி வருவதாக பொது மக்கள் முறைபாடு தெரிவிப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். 

மாகாண சபை அமர்வில் அவர் இந்த தகவலை வௌியிட்டார். நுவரெலியா மாவட்டத்தில் இயங்கி வரும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்பள்ளிகளை மொத்த விலைக்கு குத்தகைக்கு எடுத்துள்ளதைப் போல தனியாதிக்கம் செலுத்தி வருகின்றன.

முன்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் 650 ரூபா முதல் 1000ம் ரூபாவரை அறவிடப்படுகின்றன. அதுவும் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்திலிருந்து மொத்தமாக கழித்து பெறப்படும் பணத்தில் ஒரு சிறு தொகையை மட்டும் முன்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு வழங்கிவிட்டு மிகுதியை அரச சார்பற்ற நிறுவனத்தை நடத்தி வருபவர்கள் பங்கிட்டு கொள்வதாக மக்கள் முறைபாடு தெரிவிக்கின்றனர்.

மத்திய மாகாண சபையில் முன்பள்ளிகளை முகாமை செய்வதற்கான சட்டவிதிகள் அமுலில் உள்ளது. அந்த நிலையில் ஏன் பெருந்தோட்ட பகுதிகளில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் பல கிளைகளை வைத்துக் கொண்டு இயங்குகின்ற முன்பள்ளிகளை மேற்பார்வை செய்து அங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்திக்க முடியவில்லை?.

இந்த விடயத்தில் முதலமைச்சர் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கின்ற போது ஏன் தொழிலாளர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது? இந்த நிறுவனங்கங்களை அரச கணக்காய்விற்கு உட்படுத்த வேண்டும்.

பெருந்தோட்ட பகுதிகளுக்கு உள்ளுராட்சி மன்றங்களினூடாக வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும்.

இந்த நிலையில் பெருந்தோட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களினூடாக முன்பள்ளிகளை நடத்த முடியும். இங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கு அதிக சம்பளத்தையும், கூடுதலான பயிற்சிகளையும் வழங்க முடியும். இந்த விடயத்தையும் கவனத்தில் எடுத்துகொள்ளமாறு முதலமைச்சருக்கு ஆலோசணை முன்வைப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

Leave a comment