தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

599 0

தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று (10) காலை ஹென்போல்ட் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் 08 ஏக்கர் தேயிலை மலைகளை தோட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் காடாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தத் தோட்டத்தில் நல்ல விளைச்சலை தந்த 05 ஏக்கர் தேயிலை மலையினை 2010 ஆம் குத்தகை அடிப்படையில் தனியாருக்கு விவசாயம் செய்ய வழங்கியது.

அப்போது தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்ட காணியின் குத்தகை முடிந்தப் பின் மீண்டும் தேயிலை கன்றுகள் நாட்டப்படும் என தோட்ட நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து விவசாயம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

05 வருடங்கள் குத்தகை முடிந்த பின் மீண்டும் குறித்த இடத்தினை தோட்ட நிர்வாகம் மீளப்பெற்று தேயிலை கன்றுகள் போடாமல் கைவிட்டது.

இதனால் தொழிலாளர்கள் வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் தற்போது நிர்வாகம் மலைகளில் சோளம் பயிர்செய்கை செய்ய தீர்மானம் செய்துள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 08 மணிக்கு எதிர்ப்பு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு மூடப்பட்டுள்ள காணிகளை துப்பரவு செய்து தேயிலை கன்றுகள் நாட்டுமாறும் சோளப் பயிர் செய்கையை கைவிடுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, தேயிலை மலை மூடப்படுவதால் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வேலை நாட்களை குறைப்பதாகவும், இதனால் தாங்கள் வருமான ரீதியாக பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த மாதம் சம்பளம் இருநூறு ரூபாய் தொடக்கம் 4,000 ரூபா வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கப்பெற்றதாகவும், இதனை கொண்டு குடும்ப செலவினை எவ்வாறு சமாளிப்பது பிள்ளைகளின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என திண்டாடுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

Leave a comment