சிலாபம் – வெல்ல மற்றும் ரிதிவெல்ல ஆகிய மீனவ கிராமங்களின் இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மீன் விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரம் ஒன்றை முன்னிறுத்தி இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
அந்த இடத்திற்கு வந்த வெல்ல கிராமவாசிகள், கூடாரத்தை உடைத்துவிட்டு, அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கூடாரத்தால் தமது மீன்பிடி நடவடிக்கைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
அந்த கூடாரத்தை உடைத்த பின்னர் அந்த இடத்திற்கு ரிதிவெல்ல கிராமவாசிகள் வந்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு தரப்பினர் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதால் அதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் தலையிட்டனர்.
எனினும் முறுகல் முற்றி மோதலாக மாறியுள்ளது.
சிலர் பொல்லுகளை ஏந்தியவாறு இந்த மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு மணி நேரம் அளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக மேலதிக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.