தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்படமாட்டார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

211 0

புதுச்சேரியில் தங்கி உள்ள தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்படமாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரத்தம் சிந்தி உருவாக்கி தந்த அ.தி.மு.க. ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த அரசு தொடர வேண்டும். ஜெயலலிதாவை இழந்து பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் இந்த இயக்கம் ஒருதாய் பிள்ளைகளை போன்ற கட்டுக்கோப்பான குடும்பம் போல செயல்பட வேண்டும். நமக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம்.

புதுச்சேரியில் தங்கி உள்ள அ.தி.மு.க.வைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைய மூத்த நிர்வாகிகள் பேசி வருகிறார்கள். விரைவில் நல்ல முடிவு எட்டப் படும்.

மக்கள் நலனை பிரதிபலிக்கும் அரசாக ஜெயலலிதாவின் அரசு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. எனவே 19 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்பட மாட்டார்கள். அது ஒருபோதும் நடக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment