பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிற்கு எதிராக கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மானநஷ்ட வழக்கினை நுகேகொடை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக மானநஷ்ட வழக்கொன்றை திலங்க சுமதிபால நுகேகொடை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி அமைச்சர் அர்ஜுனவுக்கு எதிராக கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவினால் இவ்வழக்கு நுகேகொடை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
‘திலங்க சுமதிபால ஊழல்வாதி. நான் அவ்வாறான நபர்களுடன் சேர்ந்து எமது நாட்டு கிரிக்கெட் துறையை அபிவிருத்தி செய்யமுடியாது. திலங்க மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. திலங்க டெலிகொம் நிறுவனத்துக்கு தலைவராக இருக்கமுடியாது’ என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறியிருந்தார்.
அதனால் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு கோரியே மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சார்பில் சட்டத்தரணி அதுல பண்டார ஹேரத் மற்றும் சஸிகா டீ சில்வா ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.