நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் இருந்தமையானது, மனச்சாட்சிப்படி வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்று முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறினார்.
வரலாற்றில் அனைத்து நீதியமைச்சர்களுக்கும் எதிராக இருந்த குற்றச்சாட்டை விடவும் மிகவும் வித்தியாசமான குற்றச்சாட்டு மூலம் தான் பதவி நீக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் அனுப்பிவைத்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டது தொடர்பாக ஊடகங்களிடம் பேசும் போதே விஜயதாஸ ராஜபக்ஷ இதனைக் கூறியிருந்தார். இது தொடர்பாக மேலும் கூறிய அவர்,
வரலாற்றில் அனைத்து நீதியமைச்சர்களுக்கும் எதிராக இருந்த குற்றச்சாட்டு தான் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அழுத்தம் பிரயோகித்தல் மற்றும் நீதிமன்றத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்தல் என்பதாகும்.
எனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கோ நீதிமன்றத்திற்கோ அழுத்தம் பிரயோகிக்கவில்லை என்பதே தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும் என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேவேளை மத்திய வங்கி பிணைமுறி போன்ற பெரிய மோசடிகள் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மூலம், பிரதான சூத்திரதாரிகள் தொடர்பாக தகவல்கள் வௌியாகிக் கொண்டிருப்பதால் அவர்கள் தற்போது அச்சமடைந்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் தனக்கு சம்பந்தம் இருப்பதாக பிரச்சாரம் செய்து தன்னை பலிக்கடாவாக மாற்ற இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக விஜயதாஸ ராஜபக்ஷ குற்றம் சட்டினார்.
அத்துடன் தான் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவில்லை என்றும், தன்னை பதவி நீக்கியதாகவும், தனது பாதையை வரும் நாட்களில் வௌிப்படுத்துவதாகவும், அதுவரை சுயாதீனமாக செயல்படுவதாகவும் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறினார்.

