பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

233 0

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 7 செயற்கைகோள்களை திட்டமிட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடையவிருப்பதை தொடர்ந்து, புதிதாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31-ந்தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது.

இதன்மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். ராக்கெட்டை ஏவுவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Leave a comment