அ.தி.மு.க. இணைப்பு பின்னணியில் பா.ஜனதா ஓ.பன்னீர்செல்வத்தை மோடி வாழ்த்தியது ஏன்?: திருமாவளவன்

202 0

அ.தி.மு.க. இணைப்பு பின்னணியில் பா.ஜனதா ஓ.பன்னீர்செல்வத்தை மோடி வாழ்த்தியது ஏன்? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைந்து தங்களுக் கிடையில் ஆட்சியதிகாரப் பதவிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இது அ.தி.மு.க.வைக் கட்டுக் கோப்பாக வலுப்படுத்தி பாதுகாக்குமா? அ.தி.மு.க. அரசையும் அதன் ஆயுள் வரையில் காப்பாற்றுமா? அல்லது சசிகலா, டிடிவி. தினகரன் தரப்பினரால் அ.தி.மு.க. உடைந்து புதிய அணி உருவாகுமா? அதனால் ஆட்சிக் கவிழுமா?

இந்த இணைப்பின் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பது உண்மையா? பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த இரு அணியினருக்கும் ஆலோசனைகள் வழங்கியதன் பின்னணி என்ன? அவர் யாருடைய பிரதிநிதியாக இருந்து செயல்படுகிறார்? சசிகலா தினகரன் தரப்பினரை நீக்கவேண்டும் என்பது மோடி விடுக்கும் அச்சுறுத்தலின் விளைவா? அல்லது அ.தி.மு.க.வையும் அ.தி.மு.க. அரசையும் பாதுகாக்க வேண்டுமென்கிற நோக்கத்தின் விளைவா?

இரு அணியினரின் இணைப்பால் அ.தி.மு.க. தொண்டர்களை விடவும், தமிழக மக்களை விடவும் பிரதமர் மோடி மட்டும் வெகுவாகப் பூரிப்படைவது ஏன்?

துணை முதல்வருக்கு மட்டுமின்றி அமைச்சர்களுக்கும் கூட பிரதமர் வாழ்த்துகளைச் சொல்வது ஏன்?.. இப்படி ஏராளமான கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.

அ.தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசு ஆகியவற்றின் நலன்கள் பாதுகாக்கப்படுமா? இல்லையா? என்பது ஒருபுறமிருந்தாலும், தமிழக மக்களின் நலன்கள் பற்றி நாம் கவலைப்படாமல் இருக்கமுடியுமா?

தற்போதைய சூழலில், பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகள் தமிழக அரசியலில் காட்டும் தீவிரமான ஈடுபாட்டினையும் அதன் தீவிரத்தையும் புரிந்து கொள்ளவேண்டியதுதான் நமது கடமையாக உள்ளது.

அ.தி.மு.க.வில் சுயமாக இயங்கும் ஆற்றலுள்ள தலைமை இருக்கக்கூடாது என்பதே இன்றைக்கு மோடியின் விருப்பமாக உள்ளது. அ.தி.மு.க. அரசை பாரதிய ஜனதாவின் ஒரு பினாமி அரசாகக் கையாள வேண்டுமென்பதும் அதன் மூலம், தேர்தலுக்கு முன்னதாகவே இங்கு அமைப்புரீதியாக பாரதிய ஜனதாவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதும் அவர்களின் திட்டம்.

இதன் அடிப்படையில் தான் அ.தி.மு.க. அணிகளின் இந்த இணைப்புக் காட்சி அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நெருக்கடியை சசிகலா-தினகரன் தரப்பினர் எவ்வாறு கையாளப் போகின்றனர் என்பதைப் பொறுத்துதான் மோடியின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.

அ.தி.மு.க. பலவீனமாவது அ.தி.மு.க.வை மட்டும் பாதிக்காது. தமிழக அரசியலிலும் இது பெரும் தாக்கத்தை உருவாக்கும். குறிப்பாக, சாதியவாத, மதவாத சக்திகள் தலை தூக்குவதற்கும் வலுப்பெறுவதற்கும் வழிவகுக்கும். இதனைக் கருத்தில் கொண்டே இந்தக் காட்சிகளைக் கவனிக்கவும் அணுகவும் வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment