இலங்கை கடற்பரப்பிற்குள் 2018 ஆம் ஆண்டு வருகை தரவுள்ள புதிய நோர்வேஜிய ஆராய்ச்சி கப்பலான பிரிட்டோவ் நன்சன் இலங்கையின் கடல்வளங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கைக்கான நோர்வே தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் நோர்வே மீன்பிடித்துறை அமைச்சுக்களுக்கிடையிலான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பின் பகுதியாக நடைபெறும் இந்த செயற்பாட்டுக்கான அங்கீகாரம் இரு நாடுகளிடமிருந்தும் கிடைத்துள்ளது.
கடல் வளங்களின் தற்போதைய நிலை, மீன்வளத்தின் இருப்பு, கண்ட மேடைகள் மற்றும் சாய்வுகளில் பயன்படுத்தப்படாத அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படும் மீன்வளங்களை விசாரணை செய்தல் இந்த மதிப்பீட்டின் நோக்கங்களாகும்.
அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நோர்வே செயலாண்மைக்குச் சொந்தமான இந்தப் புதிய கடலாராய்ச்சிக் கப்பலான பிரிட்டோவ் நன்சன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீன்பிடி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு உதவும் நோக்கில் நோர்வே கடலாராய்ச்சி நிறுவனம் உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஆகியவற்றால் இணைந்து செயற்படுகின்றது.

