அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

213 0

அமெரிக்காவிற்கும், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவின் இருதரப்புக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஒன்று அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தனர். 

நியூ ஜேர்ஷியின் சட்ட மாமன்ற உறுப்பினர் ரொட்னி பிறிலிங்குசைன் மற்றும் டெக்ஸாஸின் சட்டமாமன்ற உறுப்பினர் ஹென்றி கியூலெர் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை 10 ஆம் திகதி  சந்தித்தனர்.

அமெரிக்கச் சட்டமன்ற இடை ஓய்வுக் காலத்தின் போது இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்க உறுதிப்பாட்டைத் தொடர்ச்சியாக வலியுறுத்துவதற்காக சட்டமாமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு ஒன்றினை துரிதப்படுத்துவதற்கு, அனைத்து இனக் குழுக்களையும் சேர்ந்த இலங்கையர்களின் ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்துவதற்கு, நல்லிணக்கத்தினை உறுதி செய்வதற்கும், நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் செழிப்பினை வளர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவினை தமது உத்தியோகப்பூர்வ சந்திப்புக்களின் போது அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் ´இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான பலம் வாய்ந்த இருதரப்பு உறவினை இந்த விஜயம் வெளிப்படுத்துகின்றது´ எனக் குறிப்பிட்டார்.

´அமெரிக்க அரசாங்கத்தின் மூன்று கிளைகள் முழுவதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நல்லிணக்கம், நீதி மற்றும் பொருளாதார வளம் ஆகிய இலங்கையின் கடப்பாடுகளுக்கு எமது ஆதரவளிக்கும் செயற்பாடானது தொடர்ந்தும் இடம்பெறும்´ எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment