பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவார் என்கின்ற மக்கள் அபிப்பிராயம் தற்போது பொய்ப்பித்துள்ளது. எனவே இளைய சமூகத்தினரை போதைக்கு அடிமையாக்கிவிட்டு தமது ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று ஆட்சி நடத்துவாராயின் பொருளாதார ரீதியில் இலங்கையைக் கட்டியெழுப்புவார் என்ற அபிப்பிராயம் கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் இருந்தது. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டரை வருட ஆட்சியின் பின்னர் தமது அபிப்பிராயம் தவறானது என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
இனிவரும் தேர்தல்களில் அந்த புரிதலின் வெளிப்பாடு தெரியவரும். அது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கமும் நன்கு அறிந்துகொண்டுள்ளது. ஆகவேதான் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து மாகாண சபைத் தேர்தலையும் பிற்போடுவதற்கு எத்தனிக்கிறது.
தேர்தல் விடயத்தில் அமைச்சர் பைஸர் முஸ்தபா தான் “பொறுப்புடன்” கூறிக்கொள்வதாக பலமுறை தெரிவித்துள்ளார். எனினும் அவர் கூறும் பொறுப்பு நிறைவேற்றப்படவில்லை. ஆகவே அவர் இனி தேர்தல் விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போது “பொறுப்புடன்” என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தக்கூடாது என அவரிடம் வேண்டிக்கொள்கிறேன்.
தற்போது நாட்டில் எப்போதும் இல்லாதவாறு போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அதற்கான பின்னணியை அரசாங்கமே அமைத்துக் கொடுத்துள்ளது. அதிகளவான போதைப் பொருள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனால் அதன் விலையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்களை போதைக்கு அடிமையாக்கிவிட்டு தமது சுயநல அரசியலை முன்னெடுப்பதற்கே முயற்சிக்கின்றனர். ஆபிரிக்க நாடுகளிலும் இதுபோன்றே நடைபெறுகிறது. அங்கு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழ முற்படும்போது மக்களை போதைக்கு அடிமையாக்குகின்றனர்.
போதைக்கு அடிமையான பின்னர் மக்கள் நாட்டு அரசியல் தொடர்பிலோ வேறு விடயங்கள் தொடர்பிலோ அக்கறை காட்டாது அன்றாடம் தமக்குத் தேவையான போதைப்பொருள் பெற்றுக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
எனவே தற்போது எமது நாட்டிலுள்ள பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைய சமூகத்தினரையும் அதே நிலைக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கை களையே அரசாங்கம் மேற் கொண்டு வருகின்றது என்றார்.