தகுதியானவர்கள் சமூர்த்தி உதவியை பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்

306 0

சமூர்த்தி உதவிகளை பொருத்தமானவர்கள் பெற்றுக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

சென்ற ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சமூர்த்தி பெறுபவர்களின் எண்ணிக்கை கூட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமூர்த்தி உதவி பெறுபவர்கள் தாங்கள் பெறும் சமூர்த்தி உதவிகள் மற்றும் தங்கள் பெயர்கள் வெட்டப்படுகின்றன என முறைப்பாடுகள் செய்கின்றனர்.

குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் முழுமையாக மீள்குடியேற்றங்கள் இடம் பெறவில்லை. உழைக்கும் தகுதியுள்ளவர்களுக்கு உழைக்கும் வாய்ப்புக்கள் உருவாகவில்லை.

அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு வாழ்வாதாரம் இல்லை. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்க்கையை நடத்திச் செல்லமுடியாமலுள்ளோர் தொகை அதிகரித்துள்ளது.
அத்துடன் சமூர்த்தி உதவி பெறுவதற்கு தகுந்தோரைத் தெரிவதற்கான வரைவிலக்கணம், விதிமுறைகள் வகுக்கப்பட்டுப் பல ஆண்டுகள் கடந்து விட்டன. நிகழ்காலத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துவிட்டது. இந்நிலையில் சமுர்த்தி உதவி பெறத் தகுதியுடையோர் பட்டியல் தயாரிக்கும் விதிமுறை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

இதுவரை காலமும் சமூர்த்தி உதவி பெற்றோரின், உதவிகள் வெட்டப்படுமாயின் அவர்கள் தாங்கள் வசிக்கின்ற பிரதேச செயலாளர்களிடம் முறையிடுங்கள். இதுவரையும் சமூர்த்தி உதவி பெறத் தகுந்தோரும் உரிய சமூர்த்திப் பட்டியலில் பதிவு செய்வதில் தவறுகள் நேர்ந்திருந்தால் அது பற்றியும் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம்.

இவ் விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் பொருத்தமான தீர்மானங்களை எடுக்க முடியும். இந்த வாரத்தில் பாராளுமன்றம் நடைபெறுங் காலத்தில் சமூர்த்தி அமைச்சரிடம் பேசி சமுர்த்தி உதவி பெறுவதற்கு தகுந்தவர்கள் பாதிக்கப்படாமல் அவர்களுக்கு உதவும் பொருட்டுப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a comment