வசீம் கொலை வழக்கு – இருவரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

317 0

anura-senanayake-720x480-720x480ரக்பி வீரர் வசீம் தாஜூதினின் கொலைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள இருவரின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி காவல் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பாதிகாரி சுமித் சம்பிக்க ஆகியோரின் விளக்கமறியல் காலமே நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது, தமது மகளின் பட்டமளிப்பு நிகழ்வில் பங்குகொள்ள, முன்னாள் சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு அனுமதியளிக்குமாறு அவரது சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

எனினும் இந்த கோரிக்கையை நீதவான் நிராகரித்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அத்துடன், கொலை சம்பவம் தொடர்பிலான சீ.சீ.டி.வீ காணொளியை கனடாவுக்கு எடுத்துச் செல்ல, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு வீசா கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இன்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.