வாக்காளர் பட்டியலில் இதுவரை 83 ஆயிரம் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம்: ராஜேஷ் லக்கானி தகவல்

310 0

தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலில் இதுவரை 83 ஆயிரத்து 744 இறந்து போனவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களை சேர்ப்பதற்காக கடந்த 1 மாதம் சிறப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் ஜூலை 31-ந்தேதியுடன் முடிவடைந்தது.

இந்த பணிகளின் போது ஆன்லைன் மூலம் 51 ஆயிரத்து 566 விண்ணப்பங்களும், நேரடியாக 2 லட்சத்து 15 ஆயிரத்து 132 விண்ணப்பங்களும் சேர்ந்து மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 698 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இளைஞர்களை தவிர மற்ற வாக்காளர்களிடம் இருந்து 2 லட்சத்து 8 ஆயிரத்து 244 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதன்படி அனைத்து வயதுடைய வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 942 ஆகும்.

இதில் 1-ந்தேதி வரை ஆவணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை 3 லட்சத்து 58 ஆயிரத்து 743 ஆகும்.

தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலில் இறந்து போனவர்கள் பெயர்கள் 1 லட்சத்து 72 ஆயிரத்து 797 இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் இதுவரை 83 ஆயிரத்து 744 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மற்றவைகளை நீக்க மீண்டும் ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a comment