எப்படி மீளப்போகின்றது புதியநகர்?மக்கள் ஆதங்கம்

220 0

நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின்போது இடம்பெயர்ந்து மீண்டும் மீளக்குடியேற்றப்பட்ட முல்லைத்தீவு – புதியநகர் கிராம மக்கள்பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள போதிலும்பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உட்பட மாற்றுத்திறனாளிகளையும் அதிகமாக கொண்டுள்ள இந்தப் பிரதேசம் அரசாங்க அதிகாரிகள் உட்பட எவராலும் கவனிக்கப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

கனகராயன்குளம் கரிப்பட்டமுறிப்பு,இடையான பழைய கண்டிவீதி பகுதியில் அமைந்துள்ள புதிய நகர் எனும் கிராமத்தில் 2012 ஆம் ஆண்டு இந்திய விட்டுத்திட்டத்தில் வீடுகள் அமைக்கப்பட்டு பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களே குடியேற்றப்பட்டனர். அனைத்து வசதிகளும் ஏற்ப்படுத்தி தருவதாக உறுதியளித்தும் போக்குவரத்துக்கான வீதிகள் காடுகளாக காணப்படுவதால் பாடாசலை மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த 11 கிலோமீற்றர் நீளமான வீதி திருத்தப்படாததால் தமது பகுதிக்கான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனை உடனடியாக திருத்தி எமது பகுதிக்கான போக்குவரத்தை ஏற்ப்படுத்தி மக்களுக்கும் மாணவர்களுக்குமான வசதிகளை ஏற்ப்படுத்தி தருமாறும் கோரும் அதேவேளை

குடிநீர்த்தட்டுப்பாடு காரணமாக சிறுநீரகநோய்த்தாக்கத்திற்கும் தமது கிராமவாசிகள் உள்ளாவதாகவும் மக்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் வாக்குகளுக்காக தம்மை சந்திக்கும் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் தம்மை திரும்பிப் பார்ப்பது இல்லை எனவும் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு இரவும் தாம் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் காட்டு யானைகளிடமிருந்து தம்மை பாதுகாக்க நவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் வினவியபோதுஇவ்வாறான நெருக்கடி நிலைமைகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் காணப்படுவதாகவும் எனினும் முடிந்தளவு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a comment