இலங்கைக்கு சீனி இறக்குமதி செய்யப்படும் கொள்கலனின் ஊடாக கொக்கெயின் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதற்காக கொள்கலன்களில் மறைத்து வைக்கப்படும் கொக்கெய்ன் போதைப் பொருட்களை அடையாளம் காண்பதற்கான சோதனை கருவிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
அத்துடன் இவ்வாறான கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்கும், விசாரணை செய்வதற்கும், போதைப்பொருள் தடுப்பு காவற்துறைப் பிரிவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான பிரிவும் இணைந்து புதிய குழு ஒன்றை உருவாக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதியை தாம் காவற்துறை ஆணைக்குழுவிடம் கோரவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரத்மலானையில் கடந்த வாரம் மீட்கப்பட்ட பெருந்தொகையான கொக்கேயின் தொடர்பில் ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.