பாரம்பரிய தமிழ் கலைகளை வெளிக்கொண்டுவந்த டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழக ஆண்டு நிறைவு விழா.

509 0

கடந்த சனிக்கிழமை டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற ஆண்டு நிறைவு விழாவில் ஏராளமானோர் பங்குபற்றினார்கள். லண்டன் மற்றும் கென்ற் எல்லைப்பகுதியில் கடந்த ஏழு வருடங்களாக தமிழ்ப் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவித்து வரும் தமிழ் அறிவியற் கழகமானது தனது ஆண்டு நிறைவினையொட்டி கலைவிழாவினை ஏற்பாடு செய்திருந்தனர் . மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் முதலில் வீரமறவர்களுக்கு அகவணக்கம் செலுத்தியபின்பு பாடசாலை கீதத்துடன் கலை நிகழ்வுகளை ஆரம்பித்தார்கள்.

நூற்றுக்கும் அதிகமான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலையில் கடந்த ஆண்டு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் மெய்வல்லுனர் போட்டியை சிறப்பாக செய்துமுடித்திருந்தார்கள். பலராலும் வரவேற்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தாயகம் தேசியம் போன்றனவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வண்ணம் அமைந்திருந்தது.

அதேபோல இந்த வருடம் கலைவிழா ஊடாகா தமிழ் பாரம்பரிய கலைகளை வெளிக்கொண்டுவந்தார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் ஏழு மணித்தியாலங்கள் தொய்வின்றி இடம்பெற்றது. சிறுவர்கள் முதல் இளையவர்கள் வரை தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்திருந்தார்கள். முக்கியமாக மண்ணின் மைந்தர்களை நாடகக் கலை மூலமும் பாடல்கள் மூலமும் அரங்கேற்றினார்கள். அத்தோடு மட்டும் நின்றுவிடாமல் தாயகத்தில் இரவிராக இடம்பெறும் காத்தவராயன் கூத்தினை அரங்கேற்றி பலத்த வரவேற்பை பெற்றார்கள் மாணவர்கள். நிகழ்வுகள் முடியும் வரை காத்திருந்த அனைத்து தமிழ் மக்களும் மாணவர்களை வாழ்த்தி வரவேற்றார்கள்.

நிகழ்வின் அடுத்த பகுதியாக யோக தினேஷ் அவர்கள் வழங்கிய பட்டிமன்றம் இடம்பெற்றது. பட்டிமன்றத் தலைப்பாக தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி புலத்திலா தாயகத்திலா என்ற விவாதத்தோடு பெற்றோர்கள் களமிறங்கினார்கள் இறுதியில் தாயகம் அணி வெற்றியினை தட்டியது. இதைவிட கும்மி நடனம், கோலாட்டம், வேப்பிலை நடனம், காவடி நடனம், பரதநாட்டியம், வயலின், கர்ணன் நாடகம், பண்டாரவன்னியன் நாடகம், தாளலயம் என பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்று ஆசிரியர்கள் மதிப்பளிப்போடு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

Leave a comment