கொடிகாமம் – வரணி முள்ளி பகுதியில் பகுதியில் இரண்டு இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்களால் வாள் வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், வாள்வெட்டிற்கு உள்ளான இராணுவத்தினர் கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவம் வரணி பகுதியிலுள்ள முள்ளி என்ற கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குடத்தனைப் பகுதியில் நேற்றைய தினம் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கடலோரக் காவற்படையினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்ட நிலையில், அப்பகுதியில் பெருமளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்றைய தினம் வரணியில் இராணுவத்தினர் மீதான வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதே வேளை
வடமராட்சி, முள்ளியில் சீருடையினர் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றபோதும் அதனை உறுதிப்படுத்த பொலிஸார் மறுத்துவிட்டனர். அதுபோன்ற சம்பவம் இடம்பெற்றதாகத் தம்மிடம் தகவல் ஏதும் இல்லை என்று அவர்கள் கூறினர்.
இனந்தெரியாதவர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்தன. கடலோரக் காவற்படையினர் மீது நேற்று வடமராட்சி கிழக்கில் தாக்குதல் நடத்திய காரணத்தால் முள்ளியில் வாள்வெட்டு என்ற தகவல் வேகமாகப் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

