குப்பைகளை எரிபொருளாக மாற்றும் சில வேலைத் திட்டங்கள் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த யோசனைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் முன்னேற்றம் காணப்படவில்லை என்றால் அது பயனற்றதாகிவிடும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு சுமார் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகள் அகும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
கொழும்பு பொது நூலக வளாகத்தில், கொழும்பு தேசிய புத்தக கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒன்றரை அல்லது இரண்டு தசாப்தங்களாக இருந்த குப்பை பிரச்சினை கடந்த அரசாங்கங்களால் மறைக்கப்பட்டு வந்ததாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய கூட்டத்தில் இது சம்பந்தமாக பேசப்பட்டு பிரச்சினையை ஒரே தடவையில் தீர்க்க முடியுமாயின் தீர்வு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் எந்தவொரு பிரச்சினையையும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்க்க முடியாதென்றும் தீர்வுகள் கலந்துரையாடல் மூலமே பெறப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

