அனைத்து மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காகவே பலவந்தமாக காணாமல் போதலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சாசன சட்ட மூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மங்கள சமரவீர விசேட அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலம் தொடர்பில் அரசியல் சுயலாபத்துக்காக சிலர் உண்மையற்ற பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சட்ட மூலம் நிரந்தரமாக ‘வெள்ளைவான்’ கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
அத்துடன் பலவந்தமான கடத்தல்களில் இருந்து மொழி, மதம், இனம் என்ற பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் பாதுகாப்பு பெறுவார்கள்.
வெள்ளைவான் கடத்தல் கலாசாரத்தை அறிமுகப்படுத்திய தரப்பினரே இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இதன்மூலம் அவர்கள் வெள்ளைவான் கலாசாரத்தில் இருந்து விடுதலைப் பெறுவதை விரும்பாதவர்களாக இருக்கின்றனர்.
எனவே மக்கள் இவ்வாறான போலியான பிரசாரங்களைக் கருத்திற்கொண்டு தங்களின் தீர்மானங்களை மேற்கொள்ளாமல், உண்iமைகளை அறிந்து செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.