அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3 தமிழக மீனவர்கள் கைது

26929 0
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3 தமிழக மீனவர்கள் வடமேற்கு கோவிளம் கடற்பகுதியில் 13 கடல் மைல் தொலைவில்  நேற்று இரவு கைது  செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் ஜகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த குறித்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு வடமேற்கு கோவிளம் கடற்பகுதியில் 13 கடல் மைல் தொலைவில் வைத்து காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய படகும், அதிலிருந்த மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் ரமேஸ்கண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டு யாழ் ஊர்காவற்துறை நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது குறித்த மூவரை எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் சர்வதேச மீனவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதுடன், 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படும் என கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கடற்தொழில் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment