மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் மனித மண்டையோடு மீட்பு

311 0

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு அருகாமையில் காணப்பட்ட கழிவு நீர் செல்லும் மதகினுள் இருந்து இன்று புதன் கிழமை மாலை மனித மண்டையோடு ஒன்று மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மீட்கப்பட்டது.

குறித்த மதகினுள் மனித மண்டையோடு காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவழின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை மாலை குறித்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டதோடு,மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக விசேட சட்ட வைத்திய அதிகாரி டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ,மன்னார் சட்ட வைத்திய அதிகாரி எம்.யு.எம்.சப்வான் ஆகியோர் முன்னிலையில் இன்று புதன் கிழமை மாலை அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று புதன் கிழமை மாலை 2.45 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசேட சட்ட வைத்திய அதிகாரி டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ,மன்னார் சட்ட வைத்திய அதிகாரி எம்.யு.எம்.சப்வான் ஆகியோரின் பங்களிப்புடன் அடையாளம் காணப்பட்ட மண்டையோடு அகழ்வு செய்யும் பணி இடம் பெற்றது.

இதன் போது மன்னார் பொலிஸார் மற்றும் விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் மன்னார் நீதவான் முன்னிலையில் கழிவு நீர் செல்லும் மதகினுள் இருந்து குறித்த மனித மண்டையோடு மீட்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அப்பகுதிகளில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது வெற்று இளநீர் கோம்பைகள் இரண்டு முழுமையாக மீட்டப்பட்ட போதும் வேறு எவ்வித தடையங்களும் மீட்கப்படவில்லை.

மீட்கப்பட்ட மனித மண்டையோடு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மற்றும் விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மனித மண்டையோடு மீட்கப்பட்ட இடத்தில் இருந்து மன்னார் நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் மன்னார் பொது மயானம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment