காணாமல்போனோரின் உறவினர்களைப் பொறுத்தவரையில் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. எனவே காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிந்து கூறவேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும் அதிலிருந்து விலகிச் செல்ல முடியாது என்று காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.
காணாமல்போனோர் தொடர்பாக கண்டறிவதற்காக ஒரு பொறிமுறையை உருவாக்கி அதனூடாக உண்மையைக் கண்டறியவேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதனை தட்டிக்கழிக்க முடியாது. உண்மையை கண்டறிய முடியுமா, முடியா என்பது வேறுகதை ஆனால் அதற்கான முயற்சியை எடுக்கவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு தமது வாழ்க்கையை கொண்டுசெல்வதற்காக ஐந்து இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்கவேண்டும் என்பதுடன் அவர்களுக்கு வீடுகளையும் பெற்றுக்கொடுக்கவேண்டியது அத்தியாவசியமான விடயமாகும் என்றும் மெக்ஸ்வல் பரணகம சுட்டிக்காட்டினார்.
காணாமல்போனோரின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலைமையில் அதுதொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;- காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை நான் இதுவரை முழுமையாக ஆராயவில்லை. எவ்வாறிருப்பினும் காணாமல்போனோர் விவகாரத்தில் அரசாங்கம் விரைவாக செயற்படவேண்டியது அவசியமாகும். இந்த விவகாரத்தில் வெளிநாட்டு நிபுணர்களின் தொழிற்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் கண்காணிப்பாளர்களும் இருக்கலாம். எமது ஆணைக்குழு ஆயிரக்கணக்கான எழுத்துமூல முறைப்பாடுகளை காணமல்போனோர் தொடர்பில் பெற்றுக்கொண்டது. அத்துடன் சுமார் 6000 பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்தித்து கலந்துரையாடினோம். அதன்பின்னர் அந்த ஆணைக்குழுவானது ஒரு விசாரணைக்குழுவை நியமித்தது.
அந்த விசாரணைக்குழு பாதிக்கப்பட்டோரை சந்தித்து தகவல்களைப் பெற்றுக்கொண்டது. இந்த செயற்பாடு ஒரு தொடர் நடவடிக்கையாக அமைந்தது. இவ்வாறான நிலையில் எமது காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை முடிவுக்கு வந்தது. அதனால் எமது செயற்பாடுகளை தொடரமுடியாது போனது.
எனினும் ஒருசில விடயங்களை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அதாவது தமது அன்புக்குரியவர்கள் காணாமல் போன நிலையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு முதலில் தமது வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபா பணத்தை வழங்கவேண்டும். இந்த விடயத்தில் தாமதம் இருக்கக்கூடாது.
அதனூடாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோன்று வீடுகள் இல்லாமல் இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
காணாமல்போனவர்களின் உறவினர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பின் அவை விரைவாக மீளளிக்கப்படவேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும். காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கே இருக்கிறது.
அந்தப் பொறுப்பை யாரும் தட்டிக்கழிக்க முடியாது. குறிப்பாக இது தொடர்பான கடமையை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாது. இது தொடர்பில் அரசாங்கத்திற்கு பாரியதொரு பொறுப்பு காணப்படுகின்றது. அதாவது காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க அரசாங்கம் ஒரு பொறிமுறையை தயாரித்து அதனூடாக உண்மையை கண்டறியவேண்டும்.
இந்தப் பொறிமுறையில் காணாமல்போனோர் தொடர்பில் கண்டுபிடிக்க முடியுமா முடியாதா என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால் அதற்கான முயற்சியை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பாரிய கடமையாகும். அந்த கடமையிலிருந்து அரசாங்கம் விலகி செல்ல முடியாது என்றார்.