இலங்கையில் 9 லட்சம் பேரின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறி

188 0

இலங்கையில் அண்மையில் பெய்த பெரு மழைக்குப் பின்னரான வறட்சி நிலை காரணமாக பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சுமார் 9 இலட்சம் பேரின் உணவுப் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளதாக ஐ.நா வின் உணவு, விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. 

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஆரம்ப கால வறட்சி நிலை பரவலாக பயிர்ச் செய்கையை பாதித்துள்ளது.

குறிப்பாக நாட்டின் பிரதான உணவான நெல் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் உணவு , விவசாய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட மொத்த நெல் உற்பத்தி 2.7 மில்லியன் டன் என கூறப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கடந்த வருட விளைச்சலில் 40 சத வீழ்ச்சி என்றும் கடந்த 5 வருட உற்பத்தியில் இது 35 சத வீழ்ச்சியை காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய பயிர்களான தானியங்கள், மிளகாய் மற்றும் வெங்காயம் போன்ற மழை நீரை நம்பியுள்ள பயிர்களும் வறட்சியான கால நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவு விவசாய அமைப்பு தெரிவிக்கின்றது.

ஐ .நா வின் உணவு விவசாய அமைப்பு ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான அறிக்கையில் “உள்நாட்டில் சுமார் 2 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 9 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மை பிரச்சினையை எதிர்கொள்கின்றார்கள்.

பாதிப்புக்குள்ளானவர்கள் தங்கள் சொந்தப் பயிர்களை இழந்துள்ள நிலையில் வருமானத்தை தேடிக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். குறைவான தொழில் வாய்ப்புகளே இவர்களுக்கு கிடைக்கின்றது. 10 மாவட்டங்களில் இதே நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக 2015 – 2016ம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் சாதாரண வருமானம் 50 சதவீதமாக குறைந்துள்ளது. எதிர்வரும் பயிர் செய்கை காலத்தில் விதைகள், நீர் பற்றாக்குறை போன்றன ஏற்படும்போது மேலும் பாதிப்பு ஏற்படும்.

2017ம் ஆண்டுக்கான சிறுபோக வேளாண்மை ( நீர்ப்பாசனம் ) செய்கையில் 1.2 மில்லியன் டன் நெல் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்ட போதும் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் குறைவானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment